Published : 15 May 2023 03:42 PM
Last Updated : 15 May 2023 03:42 PM

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? - ஆலோசனையில் பங்கேற்க டெல்லி விரைந்தார் சித்தராமையா

புதுடெல்லி: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா டெல்லி விரைந்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. எனினும், முதல்வர் பதவிக்கு கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமாரும், மூத்த தலைவர் சித்தராமையாவும் போட்டி போடுவதால், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்றது. அப்போது, முதல்வராக யார் வரவேண்டும் என்பது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவரின் விருப்பமும் எழுத்துபூர்வமாகப் பெறப்பட்டது. அதோடு, இது குறித்த இறுதி முடிவை கட்சி மேலிடம் எடுக்க ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களில் ஒருவரான பன்வார் ஜிதேந்திர சிங், "அனைத்து எம்எல்ஏக்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை தயார் செய்துள்ளோம். காங்கிரஸ் தலைவருக்கு நாங்கள் அதனை அளிக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

நேற்றைய ஆலோசனைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத், "நேற்றைய கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதோடு, ஒருவரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் பேசிய மேலிட பார்வையாளர்கள், எம்எல்ஏக்களின் கருத்தை வாய்மொழியாகவும், எழுத்துபூர்வமாகவும் பெற்றுக்கொண்டனர். தற்போது முடிவு டெல்லியில் உள்ள கட்சி மேலிடத்திற்கு விடப்பட்டுள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டு அதன் பிறகு மல்லிகார்ஜுன கார்கே முடிவை எடுப்பார்" என தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, "மேலிட பார்வையாளர்கள் தங்கள் அறிக்கையை இன்று இரவுக்குள் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்குவார்கள். கர்நாடகாவில் விரைவில் நாங்கள் ஆட்சி அமைப்போம்" என தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கட்சி மேலிடம் விடுத்த அழைப்பை ஏற்று சித்தராமையா தனி விமானத்தில் டெல்லி விரைந்துள்ளார். டி.கே. சிவகுமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் இன்று மாலைக்குள் டெல்லி செல்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், "இன்று எனது பிறந்தநாள். மாநிலம் முழுவதும் இருந்து நிறைய ஆதரவாளர்கள் என்னைச் சந்திக்க வருகிறார்கள். அதோடு, எனது வீட்டில் பூஜை ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் ஒருவரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் விட்டுவிட்டோம். எனக்கு என்ன பணி வழங்கப்படுகிறதோ அதை செய்வேன். டெல்லிக்குச் செல்வதில் இன்னும் முடிவெடுக்கவில்லை. டெல்லி செல்ல வேண்டுமா என்றே எண்ணுகிறேன்" என தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x