Published : 13 May 2023 05:05 AM
Last Updated : 13 May 2023 05:05 AM

மணிஷ் சிசோடியா நீதிமன்ற காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ல் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது. அவரது நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிசோடியாவின் மனைவி தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளார். அவருடன் வீடியோ அழைப்பில் பேச அனுமதிக்கும்படி சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு அனுமதி வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம் 2 நாட்களுக்கு ஒரு முறை சிசோடியா தனது மனைவியுடன் வீடியோ அழைப்பில் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x