Published : 04 May 2023 05:01 AM
Last Updated : 04 May 2023 05:01 AM

தூக்கு தண்டனைக்குப் பதிலாக வலி குறைந்த தண்டனைகளை கண்டறிய குழு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தூக்கு தண்டனைக்குப் பதிலாக வலி குறைந்த தண்டனைகளை கண்டறிய குழு அமைப்பது தொடர் பாக பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ரிஷி
மல்ஹோத்ரா சார்பில் பொது நலன் வழக்கு (பிஐஎல்) தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடந்தது.

அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, சட்ட ஆணையத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி படித்துக் காட்டினார். அதில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனையானது மிகவும் கொடூரமானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரிஷி மல்ஹோத்ரா தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறும்போது, “நாட்டில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை என்பது தூக்கு தண்டனையாகும். மரண தண்டனையை, குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் உள்ளனவா என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கவேண்டும். இதுதொடர்பாக விவாதம் நடத்தி, தகவல்களை சேகரிக்க வேண்டும். அந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி கூறியதாவது: மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்கும்போது குறைவான வலியை தரக்கூடிய சாத்தியமான மற்றும் பயனுள்ள மாற்று முறைகளை ஆராய நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு அரசுக்கு நான் பரிந்துரைத்துள்ளேன். இதுதொடர்பாக ஒரு குழுவை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x