Last Updated : 04 May, 2023 04:32 AM

 

Published : 04 May 2023 04:32 AM
Last Updated : 04 May 2023 04:32 AM

வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கர்நாடகாவில் களைகட்டிய தேர்தல் பிரச்சாரம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இறுதிகட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 10-ம் தேதி ஒரே கட்டமாக‌ நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி மோதல் உள்ளது.

இது 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் பாஜக, காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதிலும் இருந்து கர்நாடகாவில் குவிந்துள்ளனர். பாஜகவை பொருத்தவரை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி
ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி உற்சாக கோஷம்: பிரதமர் மோடி நேற்று அங்கோலாவில் 2 கி.மீ. தூரத்துக்கு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் பைலா அங்கோலா, மூடபிதரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ‘பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடைவிதிக்கப்படும்’ என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், பிரதமர் தனது
உரையை தொடங்குவதற்கு முன்பு, ‘‘ஜெய் பஜ்ரங் பலி’’ என்று முழக்கமிட, கூட்டத்திலும், கோஷம் எதிரொலித்தது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்சல்புரா, கொள்ளேகால் ஆகிய இடங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆனேக்கல், மாகடி, ராம்நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சி.வி.ராமன் நகர், சாந்தி நகர், காந்தி நகர் ஆகிய தொகுதிகளில் தமிழில் பேசி வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குல்பர்கா, சின்சோலி தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்போது, ‘‘எனது மகனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி 3 முறை இங்கு வந்துள்ளார். ஒரு எம்எல்ஏவை பார்த்து பிரதமர் பயப்படுவது வேடிக்கை’’ என்றார்.

முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பீதர், ரெய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ‘‘பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் 40 சதவீத ஊழல் நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஊழல் ஆட்சி ஒழிக்கப்படும்'' என்று அவர் பேசினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விஜயநகர், இண்டி ஆகிய தொகுதிகளில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அங்கு கூட்டம் அலைமோதியதால் உற்சாகமடைந்த பிரியங்கா, கைகளை தட்டி ஆரவாரப்படுத்தினார். இண்டியில் அவர் பேசும்போது, ‘‘ராகுலை பார்த்து பிரதமர் பயப்படுகிறார். அதனாலேயே அவரை அடக்க முயற்சிக்கிறார்’’ என்றார். முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர், சாந்தி நகர், சிவாஜிநகர், பிடிஎம் லேஅவுட் உட்பட 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் தமிழகத்தில் இருந்துவந்த காங்கிரஸாரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மஜத வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தேவனஹள்ளியில் திறந்த வேனில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார். முன்னாள் முதல்வர் குமாரசாமி மண்டியா, ஹாசன் மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரே வாரமே இருப்பதால் கர்நாடகாவில் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x