Published : 25 Apr 2023 10:26 PM
Last Updated : 25 Apr 2023 10:26 PM

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு

சண்டிகர்: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார். அவருக்கு வயது 95.

பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவர், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரகாஷ் சிங் பாதலின் மகனான சுக்பிர் சிங் பாதலுக்கு நெருக்கமானவர்களும், மருத்துவமனை தரப்பும் அவரின் உயிரிழப்பை உறுதி செய்துள்ளனர்.

பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்களில், "ஸ்ரீ பிரகாஷ் சிங் பாதல் ஜியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை அவர். மேலும் நமது தேசத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய குறிப்பிடத்தக்க அரசியல்வாதியும்கூட. பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்ததுடன், நெருக்கடியான காலங்களில் மாநில நலன்களை காத்தவர்.

ஸ்ரீ பிரகாஷ் சிங் பாதலின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. நான் பல தசாப்தங்களாக அவருடன் நெருக்கமாகப் பழகி வந்தேன். குறிப்பாக அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எங்களின் பல உரையாடல்களை இப்போது நினைவுகூர்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற அவரின் தொண்டர்களுக்கும் எனது இரங்கல்கள்" என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x