Published : 25 Apr 2023 04:09 PM
Last Updated : 25 Apr 2023 04:09 PM

‘ரெயின்போ திருமணங்கள் கைகூடும்...’ - தலைமை நீதிபதிக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர் நம்பிக்கைக் கடிதம்

புதுடெல்லி: ரெயின்போ திருமணங்கள் கைகூடும் என நம்பிக்கை தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பு ஸ்வீகார் (Sweekar) கடிதம் எழுதியுள்ளது.

தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், ரெயின்போ திருமணங்கள் கைகூடும் என நம்பிக்கை தெரிவித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் 400 பெற்றோர் இணைந்து இக்கடிதத்தை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:

“நாங்கள், எங்கள் குழந்தைகளின் உறவு சிறப்புத் திருமண சட்டங்களின் கீழ் சட்டபூர்வ அங்கீகாரம் பெற வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறோம். இந்தியா மிகப்பெரிய தேசம். பன்முகத்தன்மையை மதிக்கக்கூடிய தேசம். ஆகவே, எங்கள் குழந்தைகளின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு அவர்களின் பாலின சார்பை மதித்து ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம்.

நாங்கள் இந்த நிலையை எட்டுவதற்கு முன்னர் எங்களுக்கு புரிதல் ஏற்பட நீண்ட காலமானது. நாங்கள் இதன் நிமித்தமான விஷயங்களைக் கற்றோம், விவாதித்தோம், பொறுமையோடு பிரச்சினையை அணுகினோம். இன்று ஒருவழியாக நாங்கள் எங்களின் குழந்தைகளின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, அவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அவர்களின் விருப்பங்கள் ஏற்புடையதே என்பதை புரிந்து கொண்டுள்ளோம்.

எங்களைப் போலவே எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம். தன்பாலின உறவாளர்களின் திருமணத்தை எதிர்ப்பவர்களுக்கு மாறுவார்கள். இந்திய மக்களின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் மீதும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், எங்கள் குழந்தைகள் சமூகத்தில் மாண்புடன் ஏற்றுக்கொள்ளத்தகவர்களாக நடமாட வழி செய்தது. சமூகம் என்பது மாறிக் கொண்டே, பரிமாணித்துக் கொண்டே இருக்கும். கடல் அலைகள் மேலெழும்போது அது எல்லாப் படகுகளையும் தூக்கிவிடுவது போல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகத்தில் ஒரு விளைவை ஏற்படுத்தியது. அந்தத் தீர்ப்பால் தன்பாலின உறவாளர்கள் மீதான வெறுப்புப் பார்வை மாறியது. சமூகம் அவர்களை பொறுத்துக் கொண்டது. இப்போது ஏற்றுக்கொள்கிறது. அதனால் எதிர்காலத்தில் தன்பாலின உறவாளர்களான எங்கள் குழந்தைகளின் ரெயின்போ திருமணம் சட்ட அங்கீகாரம் பெறும் என நம்புகிறோம்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பார் கவுன்சில் எதிர்ப்பு: இதனிடையே,இந்தியாவில் பல்வேறு மதம், கலாச்சாரத்தை பின்பற்றும் மக்கள் வசிக்கின்றனர். நாட்டின் அடிப்படை சமூக கட்டமைப்பு தொடர்பான விவகாரங்கள் நாடாளுமன்றத்தில்தான் முடிவு எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் தன்பாலின திருமண விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பதுதான் நல்லது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுப்பது எதிர்மறையாக அமையக்கூடும்.

நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதிக்கக்கூடும்.நாட்டின் 99.9 சதவீத மக்கள் தன்பாலின திருமணத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே, தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பதே சிறந்ததாக இருக்கும்" என்று பார்கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x