Last Updated : 24 Apr, 2023 11:31 AM

3  

Published : 24 Apr 2023 11:31 AM
Last Updated : 24 Apr 2023 11:31 AM

அத்தீக் சகோதரர்களைக் கொன்றவர்களுக்கு இந்து மகா சபா பாராட்டு; கொலையாளிகளுக்கு உதவத் தயார் என அறிவிப்பு

அத்தீக் அகமது | கோப்புப்படம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாதா அரசியல்வாதியான அத்தீக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவை சுட்டுக் கொன்றவர்களை அம்மாநில இந்து மகா சபா பாராட்டியுள்ளது. மேலும், அந்த மூன்று கொலையாளிகளுக்கும் உதவத் தயார் எனவும் அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நில ஆக்கிரமிப்பு, ஆள்கடத்தல், கொலை உள்ளிட்ட 103 வழக்குகளில் சிக்கியவர்கள் அத்தீக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது. கைதிகளான இவர்கள் இருவரையும் ஏப்.15-ல் பிரயாக்ராஜின் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். வெளிநாட்டு துப்பாக்கிகளால் இவர்களை சுட்டுக் கொன்ற அருண் மவுரியா (18), லவ்லேஷ் திவாரி (22) மற்றும் சன்னிசிங் (23) ஆகிய இந்த மூவரும் அதே இடத்தில் சரணடைந்தனர். அம்மூன்று கொலையாளிகளுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச மாநில இந்து மகாசபா அமைப்பு பாராட்டுத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அம்மாநில இந்து மகாசபாவின் தலைவர் அங்கித் பட்நாகர் தனது அறிக்கையில், ‘பகவான் ஸ்ரீராம், சமூகத்தை பயமுறுத்தி வந்த அரக்கர்களை கொன்றார். இந்த வகையில், சமூகத்தினர் மீது குற்றங்கள் புரிந்த அத்தீக் அகமதுவையும், அவரது சகோதாரர் அஷரப் அகமதுவையும் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொன்று பொதுமக்களை காத்துள்ளனர். எனவே, இம்மூவருக்கும் உதவுவது என இந்து மகாசபா முடிவு செய்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். இதில் உதவி என்பது எந்த வகையிலானது எனக் குறிப்பிடவில்லை.

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தின் பரேலியிலுள்ள ‘இத்தஹாத்-எ-மில்லத் கவுன்சில்’ தலைவரான பிரபல முஸ்லிம் மவுலானா தவுக்கீர் ராசா, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார். இதில் அத்தீக், அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மாநில அரசை கண்டித்துள்ளார். இந்த கொலைக்கு முன்பாக முதல்வர் யேகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தாதாக்கள் பற்றிய விவாதத்தில்,‘மண்ணோடு மண்ணாக்கி விடுவேன்.’எனக் கூறியதையும் மவுலானா தவுக்கீர் கண்டித்துள்ளார்.

இதற்கிடையில், பிராயாக்ராஜ் முனிசிபல் நகராட்சி உறுப்பினரான ராஜு என்கிற ராஜ்குமார் சிங்கின் அறிக்கையும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவரான இவர், பிரயாக்ராஜின் முனிசிபல் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயன்று வந்தார். இவர்,‘கொலை செய்யப்பட்ட அத்தீக் ஒரு தியாகி. முலாயம்சிங்கிற்கு அளிக்கப்படும் போது அத்தீக்கிற்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும். அவரது இறுதிச் சடங்கிற்காக அத்தீக்கின் உடல் மீது தேசியக் கொடியை போர்த்த வேண்டும்.’என தெரிவித்திருந்தார். இத்துடன் தானே அக்கொடியை அத்தீக்கின் சமாதியில் போர்த்தியும் இருந்தார் ராஜ்குமார். இதையடுத்து ராஜ்குமார் மீது தேசியக்கொடியை அவமானப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் காங்கிரஸ் அவரை கட்சியிலிருந்து விலக்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் மகராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தின் மஜல்காவ்ன் நகரில் மோசின் பைய்யா மித்ரா மண்டல் எனும் அமைப்பினரால் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அத்தீக், அஷ்ரப்பின் பெரிய படங்களுடன் இருந்த அந்த பேனர்களில் அவர்கள் தியாகிகள் எனக் குறிப்பிட்டு பாராட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்நகரின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அளித்த புகாரின் பேரில் அந்த பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டன. அதனை வைத்த மூவருக்கும் அத்தீக்கின் தொடர்பு உள்ளதா எனவும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x