Published : 22 Apr 2023 03:36 PM
Last Updated : 22 Apr 2023 03:36 PM

அரசு இல்லத்தை காலி செய்த ராகுல் காந்தி - மக்களின் இதயங்களில் குடியிருப்பதாக காங். கருத்து

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தை ராகுல் காந்தி காலி செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். 2004 முதல் 2019 வரை அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், 2029 முதல் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் 12ம் எண் கொண்ட வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டது. மோடி என்ற சமூகத்தை ராகுல் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி இழப்புக்கு ஆளானார்.

இதையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி, அதன் சாவியை இன்று மக்களவைச் செயலகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ''இந்த நாடு ராகுல் காந்தியின் வீடு. நாட்டு மக்களின் இதயங்களில் ராகுல் குடியிருக்கிறார். மக்களுடனான அவரது உறவை யாராலும் பிரிக்க முடியாது. சிலர் அவரை தங்களது மகனாகப் பார்க்கிறார்கள். சிலர், அவரை சகோதரனாகப் பார்க்கிறார்கள். சிலர் அவரை தலைவராகப் பார்க்கிறார்கள். அதனால்தான் நாடு, என் வீடு உங்கள் வீடு என கூறுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. என் வீடு உங்கள் வீடு என்ற பொருள் கொண்ட இந்தி வாசகம் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

அரசு இல்லத்தை ராகுல் காந்தி காலி செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், ''மக்களவைச் செயலகத்தின் உத்தரவின் பேரில் ராகுல் காந்தி தனது அரசு இல்லத்தை காலி செய்துவிட்டார். ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகலாம். ஆனாலும், அவர் விதிகளுக்கு மதிப்பளிப்பவராக இல்லத்தை காலி செய்துவிட்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x