Published : 21 Apr 2023 05:01 AM
Last Updated : 21 Apr 2023 05:01 AM

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாத தாக்குதல் - 5 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மெந்தரில் உள்ள பதாதுரைன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீப்பிடித்து எரிந்த ராணுவ வாகனம்.

ஜம்மு/புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில், ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x