Published : 05 Apr 2023 06:47 AM
Last Updated : 05 Apr 2023 06:47 AM

கரோனாவுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பா? - ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு என மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கரோனா பாதிப்புக்கும் மாரடைப் புக்கும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: கரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கிறது. இந்தியா வில் இதுவரை 214 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீபத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.ஒமைக்ரானின் திரிபான பிஎப்.7வகை வைரஸும் எக்ஸ்பிபி1.16வகை வைரஸும் கடைசியாக கண்டறியப்பட்டுள்ளன. இவைதான் இப்போதைய கரோனா பரவலுக்கு காரணமாக உள்ளன. எனினும், இவற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

அதேநேரம் கரோனா பரவலைசமாளிக்க தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவு,மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்உள்ளிட்டவற்றை தயார் நிலையில்வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வாரந்தோறும் ஆய்வு நடத்தப்படுகிறது.

புதிதாக உருமாறிய வைரஸ்கண்டறியப்படும்போது அதைஆய்வகத்தில் தனிமைப்படுத்துகிறோம். பின்னர் அவற்றுக்கு எதிராக கரோனா தடுப்பூசி செயல்படுகிறதா என ஆய்வு செய்கிறோம். இதன்படி, இதுவரை கண்டறியப்பட்டுள்ள அனைத்து புது வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பதைப் பார்க்கிறோம். இதனால் கரோனா பரவலுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் அடுத்த3 மாதங்களில் வெளியாகும்.

பக்கவாதத்துக்கும் கரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு அடுத்த 2 மாதங்களில் முடிவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x