Published : 15 Mar 2023 06:06 AM
Last Updated : 15 Mar 2023 06:06 AM

போபால் விஷவாயு கசிவு வழக்கு - கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரிய மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி: போபால் விஷவாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். யூனியன் கார்பைட் இந்தியா நிறுவனம் என்ற கெமிக்கல் தொழிற்சாலையில் இந்த பயங்கர விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 1989-ம் ஆண்டு இழப்பீடு வழங்கப்பட்டது.

யூனியன் கார்பைட் இந்தியா தொழிற்சாலையின் தற்போது உரிமையாளராக டாவ் கெமிக் கல்ஸ் நிறுவனம் உள்ளது. இதனிடையே, போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.7,400 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

6 மடங்கு இழப்பீடு: இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது: போபால் விஷவாயு கசிவுவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மடங்கு இழப்பீடுவழங்கப்பட்டுள்ளது. விஷவாயு விவகாரத்தை மீண்டும் கிளப்பினால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கே சிக்கலாக அமைந்துவிடும். மேலும், ரிசர்வ் வங்கியிடம் மீதமுள்ள ரூ. 50 கோடி இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறோம். கூடுதல் இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரிய மத்திய அரசின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x