Last Updated : 13 Mar, 2023 04:52 AM

 

Published : 13 Mar 2023 04:52 AM
Last Updated : 13 Mar 2023 04:52 AM

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதியோர் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்கும் வசதி - தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய‌ தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் 3 பேர் அடங்கிய குழு கடந்த 9-ம் தேதி பெங்களூரு வந்தது.

இந்த குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக சட்டப் பேரவையின் பதவிக்காலம் வருகிற மே 24-ம் தேதியுடம் நிறைவடைகிறது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் 18 வயது நிறைவு செய்த 9 லட்சத்து 17 ஆயிரத்து 241 வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்க உள்ளனர்.

மாநிலத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 763 பேர் இருக்கின்றன‌ர். இதில் பெரும்பான்மையான வாக்காளர்கள். வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே நாட்டில் முதல் முறையாக 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத் திறனாளிகளும் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்கும் வசதி செய்து தரப்பட இருக்கிறது.

இந்த வசதியை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் செல்போன் செயலி அல்லது தேர்தல் ஆணைய ஊழியர்களிடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் படிவம் 12டி வழங்கப்பட்டு, வாக்களிக்க தேவையான படிவம் வழங்கப்படும். அனைவரும் தங்களது வாக்கு அளிக்கும் உரிமையை பெற வேண்டும் என்ற நோக்கத்திலே இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x