Published : 06 Mar 2023 09:33 AM
Last Updated : 06 Mar 2023 09:33 AM

ம.பி.யில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார்

திட்டத்தைல தொடங்கி வைத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

போபால்: பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் முதலமைச்சரின் அன்பு சகோதரி (லாட்லி பெஹனா) திட்டத்தை, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தனது பிறந்தநாள் தினமான நேற்று தொடங்கி வைத்தார்.

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்குபெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,60,23,733. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளில் குறைந்தது 18 தொகுதிகளில் பெண்வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை விட அதிகம் உள்ளனர். ம.பி.யில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.79 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.30 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இங்கு புதிதாக சேர்ந்த 13.39 லட்சம் வாக்காளர்களில் 7.07 லட்சம் பேர் பெண் வாக்காளர்களாக உள்ளனர்.

இதனால் பெண் வாக்காளர்களை கவரும் நடவடிக்கையில் பாஜக, காங்கிரஸ் ஆகியவை இப்போதே இறங்கியுள்ளன. ம.பி அரசு சமீபத்தில் தாக்கல் செய்தரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டில், ரூ.1.02 லட்சம் கோடி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட 22 சதவீதம் அதிகம். பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் வகையில் முதல்வரின் அன்பு சகோதரி திட்டத்துக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ..2.5 லட்சத்துக்கு குறைவாக உள்ள ஒரு கோடி பெண்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தை முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தனது பிறந்தநாள் தினமான நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் வருமானவரி செலுத்தும் வரம்புக்குள் வராத பெண்களுக்கு ரூ.1,000 நிதியுதவி அளிக்கப்படும். இவற்றைப் பெற தகுதியான பெண்கள் மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பத்தை அளிக்கலாம். இவற்றை பரிசீலனை செய்தபின் பயனாளிகளின் பட்டியல் மே 1-ம் தேதி வெளியிடப்படும். இறுதிப் பட்டியல் மே 31-ம் தேதி வெளியிடப்படும். பயனாளிகளுக்கு ஜூன் 10-ம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000/- நிதியுதவி கிடைக்கும்.

ரூ.18,000 நிதியுதவி: காங்கிரஸ் வாக்குறுதி

முதல்வரின் நிதியுதவி திட்டத்துக்கு போட்டியாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ முதல்வர் சவுகானின் வெற்று அறிவிப்புகளை வெளியிடுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.18,000 நிதியுதவி அளிக்கப்படும். இந்த வாக்குறுதியில் இருந்து காங்கிரஸ் பின்வாங்காது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் தற்சார்புடைய பெண்களாக மாற்றப்படுவார்கள் ’’ என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x