Published : 03 Mar 2023 06:47 PM
Last Updated : 03 Mar 2023 06:47 PM

ஜேஎன்யுவில் மாணவர்கள் இனி தர்ணாவில் ஈடுபட்டால் ரூ 20,000 அபராதம்

கோப்புப் படம்

புதுடெல்லி: புதிய விதிகளின்படி, ஜேஎன்யுவில் மாணவர்கள் இனி தர்ணாவில் ஈடுபட்டால் ரூ.20,000 அபராதமும், அதிகாரிகளை முற்றுகையிட்டால் மாணவர்கள் சேர்க்கை ரத்தும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஎன்யு பல்கலைகழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வறிக்கையின்படி, ஜேஎன்யு பல்கலைகழக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், மாணவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டாலோ அவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படலாம் அல்லது ரூ.30,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளுக்கு ஜேஎன்யுவின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜேஎன்யு தலைமைப் பணிப்பாளர் ரஜ்னிஷ் மிஸ்ரா அளித்த பேட்டி ஒன்றில், “புதிய விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. புதிய விதிகள் போதிய கால ஆய்வுக்கு பின்னரே வகுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது, அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த ஜனவரி மாதம்17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா - மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிபிசியின் ஆவண படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது. என்றாலும், பிபிசி ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பிபிசி ஆவண படத்துக்கான இணைப்பும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதள பதிவுகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.

இதனிடையேதான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப் படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டிருந்ததால் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி செல்போன்களில் ஆவண படத்தை பார்த்தவர்கள்மீது கற்கள் வீசப்பட்டன் இதனால் பதற்றமான சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x