Published : 27 Feb 2023 12:10 PM
Last Updated : 27 Feb 2023 12:10 PM

அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லும்: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்ற முடியும். இவர்களில் 25 சதவீதம் பேர் அவர்களின் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள், ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாது.

இந்த திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இவர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தப் பணியில், பணி நிரந்தரம் இல்லை, ஓய்வூதியம் இல்லை என்பதால், இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்தத் திட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சத்தீஸ் சந்திர ஷர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று(பிப். 27) தீர்ப்பு வழங்கப்பட்டது. நாட்டின் நலன் கருதி இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது என்றும், இந்த திட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x