Published : 23 Feb 2023 01:04 PM
Last Updated : 23 Feb 2023 01:04 PM

சமூக விரோத கும்பலுடன் தொடர்புடைய 6 பேர் கைது: சோதனையைத் தொடர்ந்து என்ஐஏ நடவடிக்கை

கோப்புப்படம்

புதுடெல்லி: லாரன்ஸ் பிஷ்னோய், ஜக்கு பக்வான்பூரியா, கோல்டி பிரார் உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுடன் தொடர்புடைய 6 பேரை தேசிய புலனாய்வு முகமை இன்று பிப்.23 ஆம் தேதி கைது செய்துள்ளது.

பாகிஸ்தானுடன் தொடர்புடைய சமூகவிரோத கும்பல்களை பிடிக்கும் வகையில் 8 மாநிலங்களில் 70 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொர்ந்து இன்று வியாழக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் 6 பேரை கைதுசெய்துள்ளனர். லக்கி கோஹர், லக்வீர் சிங், ஹர்ப்ரீட், டலிப் பிஷ்னோய், சுரிந்தர் மற்றும் ஹரி ஓம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணத்துக்காக பிரபலங்களை கொலை செய்வது, தொழிலதிபர்கள், நிபுணர்களை கடத்துவது, போதைப் பொருள் கடத்துவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் இந்த பிரிவினைவாத குழுக்கள், சமூகவிரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன என்று தேசிய புலனாய்வு முகமை முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப்,ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் சமூக விரோத கும்பல்கள் ஆழமாக கால் ஊன்றியுள்ள நிலையில், இம்மாநிலங்களில் , கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

டெல்லி அடுத்த குருகிராமின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் ரவுடி கவுசல் சவுத்ரி பிடிபட்டார். ஹரியாணாவின் சோனிபட், சிர்சா, நர்னால் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. நர்னாலில் ரவுடி சிக்குஎன்பவர் சிக்கினார். இவர்கள் நீரஜ் பவானா சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்கள்.

பஞ்சாபில் லாரன்ஸ் பிஷ்னோய், கனடாவை சேர்ந்த ரவுடிகள் கோல்டி பிரார், லக்பிர் லண்டா ஆகியோர் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சண்டிகர் யூனியன் பிரதேச பகுதியிலும் சோதனை நடைபெற்றது.

உத்தரப் பிரதேசத்தின் 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிலிபட் பகுதியில் தில்பாக் சிங் என்பவரது வீட்டில் 4 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. சமூகவிரோத கும்பல்களுக்கு அவர் ஆயுதங்களை விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானாவுடன் தொடர்புடைய சிலரது வீடுகளில் 50-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பலர் சிக்கினர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x