Published : 22 Feb 2023 08:34 AM
Last Updated : 22 Feb 2023 08:34 AM

இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பள்ளி மற்றும் உயர்கல்விக்கான திட்டமிடப்பட்ட செலவினம் சுமார் 8.3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருப்பதை சமீபத்திய தரவுகள் எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

அந்த வகையில், இந்தியாவில் இன்னும் 1.2 லட்சம் பள்ளிக்கூடங்கள் ஒரே ஒரு ஆசிரியரை நம்பித்தான் இயங்கி வருகின்றன.

மாணவர்-ஆசிரியர் விகிதம், ஓர் ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்பான தற்போதைய தரவுகள் இந்தியாவில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

மேலும், கல்வித் துறையில் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான தீவிர முன்னெடுப்புகள் காணப்பட்ட போதிலும் பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் இணைய வசதி இல்லாத நிலைதான் உள்ளது.

பிஹாரில் 60 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். மாணவர்-ஆசிரியர் விகிதங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரதேசம், பீஹார் முதலிடங்களில் உள்ளன.

மத்திய பிரதேசத்தில் மட்டும் 16,000-க்கும் மேற்பட்ட ஓர் ஆசிரியர் பள்ளிகள் உள்ளன.

ஒட்டுமொத்த மதிப்பீட்டின்படி இந்தியாவில் 8% பள்ளிகள் ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு செயல்பட்டு வருகின்றன. நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவான பள்ளிகளில்தான் இணைய வசதி உள்ளது. அதன்படி 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிக்கும் குறைவான பள்ளிகள்தான் இணைய வசதியை கொண்டுள்ளன. இதுபோன்ற நிலையில், பள்ளிகளில் டிஜிட்டல் திட்டங்களை செயல்படுத்துவது கடினமான பணியாகவே இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x