Last Updated : 22 Feb, 2023 05:32 AM

 

Published : 22 Feb 2023 05:32 AM
Last Updated : 22 Feb 2023 05:32 AM

ஜேஎன்யு மாணவர்களுக்கு திமுக எம்பிக்கள் ஆறுதல் - மாணவர் பேரவை அலுவலகத்தில் மீண்டும் பெரியார் படம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தாக்கப்பட்ட மாணவர்களை திமுக எம்.பி.க்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். ஜேஎன்யு மாணவர் பேரவை அலுவலகத்தில் மீண்டும் பெரியார் படம் மாட்டப்பட்டது.

டெல்லி ஜேஎன்யுவில் இரண்டு தினங்களுக்கு முன் தமிழர்கள் உள்ளிட்ட 15 மாணவர்கள் மீதுதாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் மாணவர் அமைப்பான அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) நடத்தியதாக புகார் எழுந்தது.‘100 ப்ளவர்ஸ்’ எனும்மாணவர் அமைப்பின் சார்பில்திரையிடப்பட்ட படக்காட்டியின் போது இவர்கள் தாக்குதலை நடத்தினர். இதற்கு அங்கிருந்த வீரசிவாஜியின் உருவப்படம் அவமதிக்கப்பட்டதாக அவர்கள் காரணம் கூறினர்.

தாக்குதலில் தூத்துக்குடியை சேர்ந்த ஆய்வு மாணவர் எஸ்.நாசர் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டது. அவருக்கும் இதர மாணவர்களுக்கும் ஆறுதல் கூறும்வகையில் நேற்று முன்தினம் இரவு, திமுக எம்.பி.க்கள் நேரில் சென்றிருந்தனர்.

மாநிலங்களவை எம்.பி.யான திருச்சி சிவாவை அவரது கட்சியான திமுக அனுப்பி வைத்தது. அவர், பாதிக்கப்பட்ட மாணவர்களை ஜேஎன்யு வாசல் முன்பாக சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ஜேஎன்யுவில் ஏபிவிபியினர் நடத்தும் தாக்குதலை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக மாணவர்களிடம் உறுதி அளித்தார்.

திமுகவின் மற்றொரு எம்.பி.யான டி.என்.வி.செந்தில்குமார் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களை, மாணவர் பேரவை அலுவலகமான டெப்ளாஸில் சந்தித்து பேசினார். தருமபுரி மக்களவை தொகுதி எம்.பி.யான அவர், தாம் கொண்டுவந்த பெரியார் உருவப்படத்தை அங்கு மீண்டும் மாட்டினார்.

துணைவேந்தர் உறுதி: பிறகு ஜேஎன்யு துணைவேந்தரான பேராசிரியர் சாந்திஸ்ரீ பண்டிட்டையும் அவர் சந்தித்தார். தமிழரான துணைவேந்தருடன் பாதிக்கப்பட்ட மாணவர்களை செந்தில் சந்திக்க வைத்தார். அப்போது, தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழு அமைத்து விசாரிப்பதாக எம்.பி. செந்தில் முன்பாக மாணவர்களிடம் துணைவேந்தர் சாந்திஸ்ரீ உறுதி கூறினார்.

இதனிடையே, டெப்ளாஸின் சுவர்களில் ஏபிவிபியினரால் இடதுசாரி மாணவர்களுக்கு எதிராகவும் இந்துத்துவாவிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்ட வாசகங்கள் அனைத்தும் நிர்வாகம் தரப்பில் சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டது. இந்ததாக்குதலில் ஏபிவிபியினர் மீது அப்பகுதியின் வசந்த்குன்ச் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்ட போதும் ஏபிவிபியினர் தாக்குதல்நடத்தி இருந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரும் காயம் அடைந்திருந்தார்.

இந்தமுறை காயம் அடைந்தவரான எஸ்.நாசர், தலித் மற்றும் ஓபிசி மாணவர்களுக்காக ஒரு அமைப்பை நிறுவி அவர்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இவரது நடவடிக்கையையும் ஜேஎன்யுவில் தென்னிந்திய மாணவர்கள் அதிகரித்து வருவதையும் தடுத்து நிறுத்த ஏபிவிபியினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டித்தது தேசிய அளவில் கவனம் பெற்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x