Published : 15 Feb 2023 05:22 AM
Last Updated : 15 Feb 2023 05:22 AM

தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் 60 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

சென்னை: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரியல் எஸ்டேட், ஓட்டல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வரும் 4 பிரபலமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 60 இடங்களில் வருமான வரித் துறை புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம், ஓட்டல் நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, இந்த 4 நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை அசோக் நகர், கிண்டி, அண்ணா நகர், ஐயப்பன்தாங்கல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இந்த நிறுவனங்களின் தலைமை அலுவலகம், உரிமையாளர்கள் வீடு, நிர்வாகிகளின் வீடுகள், அவர்களுடன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல, கோவை, புதுச்சேரியில் உள்ள நிறுவனங்கள், அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம், பீடி நிறுவனம், பெட்ரோல் பங்க், இன்சூரன்ஸ் ஏஜென்ஸி மட்டுமின்றி கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் தொழிலதிபர்களின் வீடுகள், கல் குவாரிகள், திருமண மண்டபம், செங்கல் சூளை உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாகர்கோவிலில் உள்ள சித்த, ஆயுர்வேத மருந்து நிறுவனம், களியக்காவிளை பகுதியில் அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. தமிழகத்தில் 40 இடங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல, ஆந்திரா, கர்நாடகாவிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் மொத்தம் 60 இடங்களில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், பென்-டிரைவ், ஹார்டு டிஸ்க், கணினிகள், வெளிநாட்டு முதலீடு தொடர்பான ஆவணங்கள், ரசீதுகள், பண பரிவர்த்தனை தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிக அளவில் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் 4 தனியார் நிறுவனங்கள் தொடர்புடைய சுமார் 60 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள், கணக்கில் காட்டாத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதுபற்றிய விவரங்களை தற்போது வெளியிட இயலாது. இது ஆரம்பகட்டம்தான். தொடர்ந்து சோதனை நடைபெறும். சோதனை முடிந்த பிறகு, அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x