Published : 25 Jan 2023 06:01 AM
Last Updated : 25 Jan 2023 06:01 AM
புதுடெல்லி: இந்துக்களின் புனித நூலான ‘ராம்சரித்மானஸ்’ குறித்து பிஹாரை தொடர்ந்து உ.பி.யிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நூலை அவமதித்த சமாஜ்வாதி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்ஸ்கிருத அறிஞரும் ராம பக்தருமான துளசிதாசரால் 15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது ராம்சரித்மானஸ். அவதி மொழியில் கவிதை நடையில் எழுதப்பட்ட இந்தநூலை இந்துக்கள் புனித நூலாகக்கருதி தங்கள் பூஜை அறையில்வைத்து பூஜிக்கின்றனர்.
இந்நூல் குறித்து உ.பி. தலித்சமூகத்தின் முக்கியத் தலைவருமான சுவாமி பிரசாத் மவுரியா கூறும்போது, “மதம் எதுவாக இருப்பினும் அதை நான் மதிக்கிறேன். ஆனால் மதத்தின் பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதை ஏற்க முடியாது. இதனால் பல கோடி மக்கள் ராம்சரித்மானஸை படிப்பதில்லை. ஏனெனில் அதில் துளசிதாஸர் தனது சொந்த விருப்பத்திற்காக எழுதிய அனைத்தும் குப்பைகளே. இந்நூலில் அவர், பெண்களையும் சூத்திரர்களையும் விலங்குகளுடன் ஒப்பிட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் தூண்டுகிறார். ராம்சரித் மானஸின் சில பக்கங்களுக்கு அல்லது முழு நூலுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உ.பி. சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் மவுரியா பதவி வகித்துள்ளார். 2021-ல் இவர் விலகி பாஜகவில் இணைந்து பகுஜன் சமாஜில் இருந்து அமைச்சரானார். 2022-ல் பதவி இறக்கப்பட்டார். இதையடுத்து பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்தார். இந்நிலையில், ராம்சரித்மானஸ் குறித்து மவுரியா கூறிய கருத்து சர்ச்சையாகி உ.பி.யில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் உ.பி. அரசை வலியுறுத்தி வருகின்றன.
பாரதிய சுஹல்தேவ் சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறும்போது, “புனித நூலை அவமதிக்கும் வகையில் கருத்து கூறிய மவுரியா மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
உ.பி. மாநில பாஜக தலைவர் பூபேந்தர் சவுத்ரியும் மவுரியா மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யுள்ளார். இதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், “மவுரியா கூறியது அவரது சொந்தக்கருத்து” என்று கூறி பிரச்சினையிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
ராம்சரித்மானஸ் குறித்து பிஹாரில் கடந்த வாரம் சர்ச்சை கிளம்பியது. அங்கு நிதிஷ் தலைமையிலான அரசின் கல்வி அமைச்சரான சந்திரசேகர், 'சமூகத்தினர் இடையே ராம்சரித்மானஸ் பிளவைஏற்படுத்துகிறது' என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். மவுரியாவின் கருத்தை அயோத்தி மசூதிகளின் முத்தவல்லிகளும் கண்டித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...