Published : 18 Jan 2023 05:47 AM
Last Updated : 18 Jan 2023 05:47 AM

துருக்கியில் வாடகை வீட்டில் உயிரிழந்த கடைசி நிஜாம் இளவரசர்: ஹைதராபாத்தில் உடல் நல்லடக்கம்; தெலங்கானா முதல்வர் அஞ்சலி

முக்ரம் ஜா (சமீபத்திய படம்)

ஹைதராபாத்: ஒரு காலத்தில் உலக கோடீஸ்வரராக இருந்த கடைசி நிஜாம் இளவரசர், துருக்கியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று ஹைதராபாத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஹைதராபாத் நிஜாம் வாரிசுகளின் கடைசி இளவரசர் மீர் அலிகான் ஜா முக்ரான் பகதூர் (89). இவர் ஒரு காலத்தில் உலகின் கோடீஸ்வரராக திகழ்ந்தவர். 7-வது நிஜாம் மன்னரான மீர் உஸ்மான் அலிகானின் பேரனும், நிஜாம் மன்னர் ஆட்சியில் இடம்பெற்ற கடைசி இளவரசருமான பிரின்ஸ் மீர் அலிகான் முக்ரம் ஜா பகதூர் (89) (மீர் புராகத் அலிகான்) உடல்நலக் குறைவால் துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இவரது கடைசி ஆசையின் படி, உடல் விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

அப்போது அவர் உடலுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து நேற்று மதியம் ஹைதராபாத் மக்கா மசூதிக்கு ஊர்வலமாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், அங்குள்ள இவரது தந்தை அஜம் ஜா சமாதியின் அருகே இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

உஸ்மான் அலிகானின் மூத்த மகனான அஜம் ஜாவுக்கும், துருக்கி நாட்டின் கடைசி சுல்தானான அப்துல் மஜீத்தின் மகளான துர்ஹா ஷஹவாருக்கும் கடந்த 6.10.1933-ல் பிறந்தவர் அலிகான் முக்ரம் ஜா பகதூர். உஸ்மான் அலிகான் தம்பதியினருக்கு அஜாம் ஜா, யூஜம் ஜா ஆகிய இருமகன்கள் இருந்தனர். ஆனால், இவர்களில் அஜாம் ஜாவுக்கு முடி சூடாமல், அவரது மகனான (தற்போது இறந்த) மக்ரம் ஜாவுக்கு 8-வது நிஜாம் இளவரசராக முடிசூட்டப்பட்டது.

அப்போது முதல் ஹைதராபாத் நிஜாம் இளவரசர் என்றே இவர் அழைக்கப்பட்டார். இவருக்கு 4 மனைவிகள், 5 பிள்ளைகள். உஸ்மான் அலிகான் அந்த கால கட்டங்களில் உலகின் பணக்காரர் வரிசையில் இடம் பிடித்திருந்தார். மக்ரம் ஜா பிறப்பிலேயே உலக பணக்காரராக இருந்தார்.

அதன் பின்னர், சில கெட்ட பழக்க வழக்கங்களால் பணம், சொத்துகளை இழந்தார். மனைவிகள், பிள்ளைகள் பிரிந்து சென்றனர். சில மனைவிகள் விவாகரத்து கேட்டு சொத்துகளை பிரித்து எடுத்து சென்றனர். இதனால், மக்ரம் ஜா சொத்துகள் அனைத்தையும் இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இவர் தனது கடைசி காலகட்டத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரில் 2 படுக்கை அறை கொண்ட வாடகை வீட்டில் தன்னந்தனியாக வசித்து வந்தார். இவரது நிலை குறித்து ‘தி லாஸ்ட் நிஜாம்’ எனும் புத்தகத்தில் ஒரு எழுத்தாளர் இவரது வாழ்க்கை வரலாறு குறித்தும், ஒரு சகாப்தம் எப்படி முடிந்தது என்பது குறித்தும் அவர் உயிருடன் இருக்கும் போதே ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x