Published : 26 Dec 2022 11:16 AM
Last Updated : 26 Dec 2022 11:16 AM

கரோனா நிலவரம்: இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய சுகாதார அமைச்சர் முக்கிய ஆலோசனை

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி: கரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய மருத்துவ சங்கத்துடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. கூட்டத்தில் நாட்டில் தற்போதைய கரோனா நிலவரம் மற்றும் கரோனா பரவலை எதிர்கொள்ள எவ்வளவு தூரம் நாடு ஆயத்தமாக இருக்கிறது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இன்றைய தொற்று நிலவரம்: இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 196 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 3,428 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 4.46 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5 லட்சத்து 30 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்தனர். அண்மையில் கேரளாவில் இருவர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் புதிதாக இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆக்ராவில் உஷார் நிலை: இதேபோல் சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய ஆக்ராவைச் சேர்ந்த 40 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது சளி, ரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவரது குடும்பத்தினரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆக்ராவில் பொது மக்களுக்கு புதிய வகை கரோனா பரவல் குறித்து சந்தேகங்கள் இருந்தால் 0562-2600412, 9458569043 என்ற சுகாதாரத் துறையில் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில் சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் ஆர்டி பிசிஆர் பரிசோதனை சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பி.எப்.7 வைரஸால் இந்தியாவில் பாதிப்பு இருக்காது: சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி தெரிவித்துள்ளார்.

"இந்திய மக்கள் பல்வேறு வகையான வைரஸ்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியர்களுக்கு ‘ஹெர்டு இம்யூனிட்டி' என்ற மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாகவே கரோனாவின் டெல்டா வைரஸ் பரவல் காலத்திலும்கூட இந்தியாவில் மோசமான விளைவுகள் ஏற்படவில்லை.

நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு இரு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக டெல்டாவுக்கு பிறகு ஒமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட 3-வது கரோனா அலையில் இந்தியாவில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.

சீனாவில் தற்போது ஒமிக்ரான் பி.எப்.7 என்ற வைரஸ் பரவி பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த நாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் முடக்கப்பட்டனர். இதன் காரணமாக சீனர்களுக்கு ஹெர்டு இம்யூனிட்டி உருவாகவில்லை. தற்போது உருமாறிய கரோனா வைரஸால் அந்த நாடு பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு எதிர்ப்பு சக்தி (ஹெர்டு இம்யூனிட்டி) ஏற்பட்டுள்ளதால் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய மருத்துவக் கூட்டமைப்புடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

பிரதமர் வேண்டுகோள்: முன்னதாக நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுகிறேன்.

முகக்கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுதல் என கரோனா தடுப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருந்தால், மகிழ்ச்சியுடன் வாழலாம்" என்று வலியுறுத்தியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x