Published : 24 Dec 2022 07:35 PM
Last Updated : 24 Dec 2022 07:35 PM

அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்த பேரக்குழந்தைகள் - குடும்பத்தோடு வரவேற்ற முகேஷ் அம்பானி

மும்பை: அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு முதன்முறையாக வந்த பேரக்குழந்தைகளை தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தோடு வரவேற்று மகிழ்ந்தார்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் ஒரே மகளான இஷாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமல் ரியால்டி நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமல் - ஸ்வாதி பிரமல் தம்பதியரின் மகனான ஆனந்த் பிரமலை அவர் மணம் முடித்திருந்தார்.

கருவுற்ற இஷாவுக்கு அமெரிக்காவில் கடந்த நவம்பர் 19-ம் தேதி இரட்டைக் குழந்தை பிறந்தது. ஒரு பெண், ஒரு ஆண் என பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தைக்கு ஆதியா என்றும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என்றும் பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவிலேயே இருந்து வந்த இஷா, குழந்தை பிறந்த பிறகு முதல்முறையாக கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் இன்று மும்பை வந்தார். அவரையும் குழந்தைகளையும் வரவேற்கும் விதமாக மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, இவர்களின் மகன்களான ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். தனது இரு குழந்தைகளில் ஒன்றை இஷா தோளில் வைத்து தூக்கி வந்தார். அவரையும், அவரது கணவரையும், குழந்தைகளையும் அம்பானி குடும்பத்தினர் வரவேற்று மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x