Published : 14 Dec 2022 06:11 AM
Last Updated : 14 Dec 2022 06:11 AM

2025 பிஹார் பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணிக்கு தேஜஸ்வி தலைமை வகிப்பார்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா: வரும் 2025-ல் நடைபெறும் பிஹார் பேரவைத் தேர்தலில்போது மெகா கூட்டணிக்கு தேஜஸ்வி யாதவ் தலைமை வகிப்பார் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

மெகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 7 கட்சிகளின் கூட்டம் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: நான் பிரதமர் பதவி வேட்பாளர் அல்ல. 2024-ம்ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சி, அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று பெரும்பாலான அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.

எனவே, பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க நான் முயன்று வருகிறேன். மக்களவைத் தேர்தலையடுத்து 2025-ல் பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று முன்தினம் நாளந்தா மாவட்டம் பைத்னா-பாகன் பிகா கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார் பேசும்போது, ‘‘நாளந்தா மாவட்ட வளர்ச்சிக்காக நான் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தேன். இது என் சொந்த மாவட்டமாகும். இங்கே நான் செய்யத் தவறிய திட்டங்களை, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் எதிர்காலத்தில் செய்வார்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x