Published : 12 Dec 2022 05:40 AM
Last Updated : 12 Dec 2022 05:40 AM

குறுக்குவழி அரசியல் நாட்டை அழிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை

பிரதமர் மோடி | கோப்புப்படம்

நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை, வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை,மெட்ரோ ரயில் சேவை, நாக்பூர் -ஷீரடி நெடுஞ்சாலை உட்பட ரூ.75,000 கோடியிலான திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, “குறுக்குவழி அரசியல் நாட்டை அழித்துவிடும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

நாக்பூரில் 2017-ல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அங்குரூ.1,575 கோடியில் அனைத்து வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நாக்பூரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.8,650 கோடியில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நாக்பூர் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.6,700 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் வகையில் 701 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 520 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நாட்டின் 6-வது வந்தே பாரத்எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாக்பூரில் இருந்து சத்தீஸ்கரின் பிலாஸ்பூருக்கு இயக்கப்படுகிறது. இவைஉட்பட ரூ.75,000 கோடியிலான திட்டங்களை பிரதமர் மோடி நாக்பூரில் நேற்று தொடங்கிவைத்துப் பேசியதாவது:

மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக 11 நட்சத்திரங்களின் மகா நட்சத்திரம் உருவாகி இருக்கிறது. இதில் முதல் நட்சத்திரம் நாக்பூர்-ஷீரடி நெடுஞ்சாலை. 2-வது நட்சத்திரம் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை. 3-வது நட்சத்திரம் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார நிறுவனம். 4-வது நட்சத்திரம் ரத்தம் தொடர்பான நோய்களைத் தடுப்பதற்காக சந்திராபூரில் கட்டப்பட்டுள்ள ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி மையம்.

ஐந்தாவது நட்சத்திரம் சந்திராபூரில் நிறுவப்படும் பெட்ரோ கெமிக்கல் துறையின் சிபெட் ஆலை. 6-வது நட்சத்திரம் நாக்பூரின் நாக் நதியின் மாசுபாட்டைக் குறைக்க தொடங்கப்பட்டுள்ள தூய்மைத் திட்டம். 7-வது நட்சத்திரம் நாக்பூரின் முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை மற்றும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் சேவையின் அடிக்கல் விழா. 8-வது நட்சத்திரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை. 9-வது நட்சத்திரம் நாக்பூர்மற்றும் அஜ்னி ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வதற்கான திட்டம். 10-வது நட்சத்திரம் அஜ்னியில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் இன்ஜின் பராமரிப்பு கிடங்கு. 11-வது நட்சத்திரம் நாக்பூர்-இடார்சி, கோஹ்லி-நார்கெட் சாலை திட்டங்கள். இந்த 11 திட்டங்கள் மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்குப் புதிய பாதையை திறக்கும்.

நாட்டின் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்திருக்கும் குறுக்கு வழி அரசியல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். சில கட்சிகள் குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்கின்றன. ஆட்சிக்கு வருவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க நினைக்கின்றன.

குறுக்குவழி அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் அரசியல் தலைவர்கள், நாட்டின் மிகப் பெரிய எதிரிகள். மக்களின் வரிப் பணம் ஊழல்கள் மூலம் சூறையாடப்பட்டதால், நாட்டின் வளர்ச்சி தடைபட்டது. குறுக்குவழி அரசியல் நாட்டை அழிக்கும். மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு இந்த அவல நிலை மாற்றப்பட்டது.

தற்போது அரசு கருவூலத்தின் ஒவ்வொரு பைசாவும் இளம் தலைமுறையினரின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக செலவிடப்படுகிறது. அண்மையில் வெளியான குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த மாநில மக்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சுயநல அரசியல் கட்சிகள், சுயநல அரசியல் தலைவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

பின்னர் கோவா சென்ற பிரதமர்மோடி, அங்கு 9-வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுவிழாவில் பேசினார். அப்போது, கோவாவில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் தேசிய யுனானி நிறுவனம், டெல்லியில் தேசிய ஹோமியோபதி நிறுவனத்தை அவர் தொடங்கிவைத்தார். கோவாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தையும் அவர் திறந்துவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x