Published : 23 Jul 2014 09:09 AM
Last Updated : 23 Jul 2014 09:09 AM

ஏடிஎம் ரசீதால் புற்றுநோய் அபாயம்: ஆய்வு நடத்த ராஜஸ்தான் முடிவு

ஏடிஎம் ரசீது தாளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுவது குறித்து மருத்துவரீதியாக ஆய்வு நடத்த ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

அவுரங்காபாதைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் மராத்தாவாடா பல்கலைக்கழகத்தின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ஏடிஎம் ரசீது தாளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஏடிஎம் ரசீது தாள்களில் பிஸ்பினால் ரசாயனம் கலந்துள்ளது. இவை மனித தோலில் ஊடுருவி உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிஸ்பினால் ரசாயனம்

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் ஆய்வறிக்கையை சுட்டிக் காட்டி பிரச்சினை எழுப்பப்பட்டது. இதற்கு அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் அளித்த பதில் வருமாறு:

பிஸ்பினால் ரசாயனம் பூசப்பட்ட ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது குறித்து இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து ஆய்வு நடத்த உயர்நிலைக் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, சுவீடன் உள்ளிட்ட நாடுகளில் பிஸ்பினால் பூசப்பட்ட ஏடிஎம் தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x