Published : 02 Jul 2022 06:47 AM
Last Updated : 02 Jul 2022 06:47 AM

அமித் ஷா வாக்குறுதியை காப்பாற்றியிருந்தால் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி உருவாகி இருக்காது - உத்தவ் தாக்கரே கருத்து

மும்பை: மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியை காப்பாற்றியிருந்தால் மகா விகாஸ் அகாடி கூட்டணி உருவாகி இருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு (மகா விகாஸ் அகாடி) கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து நேற்று முன்தினம் புதிய கூட்டணி அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மாநிலத்தின் முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர்.

இந்த சூழலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள வாக்குறுதி அளித்தார். இதன்படி முதல் 2.5 ஆண்டுகள் சிவசேனாவும் அதன்பிறகு பாஜகவும் முதல்வர் பதவியை ஏற்க முடிவு செய்யப்பட்டது.

தேர்தலுக்குப் பிறகு அமித் ஷா அளித்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றியிருந்தால் மகா விகாஸ் அகாடி கூட்டணி உருவாகி இருக்காது. பாஜக, சிவசேனா கூட்டணி அரசு ஆட்சி நடத்தி, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக முதல்வர் பதவியேற்று இருப்பார்.

ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது? இந்த முறை பாஜகவை சேர்ந்த யாரும் முதல்வர் பதவியை ஏற்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நிச்சயமாக சிவசேனா முதல்வர் கிடையாது. பாஜகவுக்கு என்ன மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது என்பது புரியவில்லை.

முதுகில் குத்த வேண்டாம்

என்னை முதுகில் குத்தியது போன்று மும்பையின் முதுகில் குத்த வேண்டாம் என்று புதிய முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். மும்பையின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் பணிமனையை காஞ்சூர்மார்குக்கு மாற்றினோம். இதனை வனப்பகுதியான ஆரேவுக்கு மாற்றும் முடிவு தவறானது. மும்பையின் சுற்றுச்சூழலை சீர்குலைக்க வேண்டாம்.

ஆட்சி, அதிகாரம் நிலையற்றது. ஆனால் மக்களின் அன்பு நிலையானது. நான் பதவியை ராஜினாமா செய்தபோது மகாராஷ்டிர மக்கள் கண்ணீர் சிந்தினர். இதுதான் சிவசேனாவின் பலம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x