Published : 09 Jun 2022 05:57 AM
Last Updated : 09 Jun 2022 05:57 AM

வேளாண் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். உடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.படம்: பிடிஐ

புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆண்டுதோறும் காரிப் பருவத்துக்கான விதைப்புப் பணி தொடங்கும்போது, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவது விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அந்த வகையில், நடப்பு 2022-23 காரிப் பருவகாலத்தில் பயிரிடப்படும் 14 வகை வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.

இதன்படி, ஒரு குவின்ட்டால் நெல்லுக்கான (பொது) எம்எஸ்பி ரூ.1,940-லிருந்து ரூ.2,040 ஆகவும் கிரேடு ஏ நெல்லுக்கான எம்எஸ்பி ரூ.1,960-லிருந்து ரூ.2,060 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ராகி குவின்ட்டால் விலை ரூ.3,377-லிருந்து ரூ.3,578 ஆகவும், சோளம் ரூ.1,870-லிருந்து ரூ.1,962 ஆகவும், துவரை ரூ.6,300-லிருந்து ரூ.6,600 ஆகவும், உளுந்து ரூ.6,300-லிருந்து ரூ.6,600 ஆகவும், வேர்க்கடலை ரூ.5,550-லிருந்து ரூ.5,850 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கம்பு குவின்ட்டால் விலை ரூ.2,250-லிருந்து ரூ.2,350 ஆகவும், பாசி பயறு ரூ.7,275-லிருந்து ரூ.7,755 ஆகவும் சூரியகாந்தி விதை ரூ.6,015-லிருந்து ரூ.6,400 ஆகவும் சோயாபீன் ரூ.3,950-லிருந்து ரூ.4,300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் வேளாண் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

காரிப் பருவத்தில் நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நெல் விதைப்புப் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கம்போல 99% அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகவே பருவமழை சீராக பெய்தது. இதனால் காரிப் பருவ வேளாண் உற்பத்தி 2.8% அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x