Published : 02 Jun 2022 06:12 AM
Last Updated : 02 Jun 2022 06:12 AM

இனி பாலியஸ்டர் துணிகளிலும் தேசியக் கொடி உற்பத்திக்கு அனுமதி

புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அம்ருத் மகோத்சவ் என்ற பெயரில் மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக்காலான தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பாலியஸ்டர் துணியால் ஆன தேசியக் கொடிகளை இயந்திரங்களில் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கெனவே கைத்தறி, பருத்தி, பட்டு, கம்பளி, கதர் துணிகளில் தேசியக் கொடிகளை உற்பத்தி செய்ய அனுமதி உள்ளது. தற்போது பாலியஸ்டர் துணிகளிலும் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேசியக் கொடி குறியீடு சட்டம்-2002-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு பாலியஸ்டர் துணியிலும் தேசியக் கொடியை உற்பத்தி செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வீட்டிலும் தேசியக் கொடி இருக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அம்ருத் மகோத்சவின் ஓர் அங்கமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

இதனிடையே, பாலியஸ்டரில் தேசியக் கொடியை உருவாக்கலாம் என்ற உத்தரவை அனைத்து அரசு துறைகளுக்கும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x