Published : 21 May 2022 04:53 AM
Last Updated : 21 May 2022 04:53 AM

ஏழுமலையானை தரிசிக்க இன்று ஆன்லைன் டிக்கெட் வெளியீடு

திருப்பதி: ஏழுமலையானை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரூ. 300 சிறப்பு தரிசனம் மூலம் தரிசிக்க ஆன்லைன் டிக்கெட்டுகளை இன்று தேவஸ்தானம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ. 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு மார்ச் மாத இறுதியிலேயே ரூ. 300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஆதலால், ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதனால், திருப்பதிக்கு நேரில் வரும் பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்று சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

தற்போது திருமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. இதன் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய தற்போது 10 மணிநேரம் ஆகிறது. இந்நிலையில், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு தேவஸ்தானம் இணையத்தில் வெளியிடுகிறது. தினமும் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 62 நாட்களுக்கு (2 மாதங்கள்) இன்று டிக்கெட்டுகள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x