Last Updated : 18 Apr, 2022 04:16 AM

 

Published : 18 Apr 2022 04:16 AM
Last Updated : 18 Apr 2022 04:16 AM

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் நள்ளிரவில் கலவரம் - காவல் நிலையம் மீது கல் வீசி தாக்குதல்: போலீஸ் வாகனங்கள் எரிப்பு

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மோதலில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.படம்- பிடிஐ

பெங்களூர்

கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் சமூக வலைதள பதிவு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸ் நிலையம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் காவல் ஆய்வாளர் உள்பட 12 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதற்றம் நிலவுவதால் ஹுப்ளியில் வரும் 20-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹுப்ளியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், முஸ்லிம்களின் புனிதத் தலமான மெக்காவில் காவிக் கொடி பறப்பது போன்ற வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானதால் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக ஹுப்ளி போலீஸாரிடம் அப்பகுதி முஸ்லிம் அமைப்பினர் புகார் அளித்தனர். உடனடியாக வழக்கு பதிவு செய்ய மறுத்த போலீஸார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்யவும் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்பினர், சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் ஹுப்ளி பழைய காவல் நிலையம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூகவலைதளங்களில் வெறுப்பு தகவலை பரப்பிய இளைஞரை கைது செய்ய வலியுறுத்தியும் போலீஸாரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, சர்ச்சைக்குரிய படத்தை பதிவிட்ட இளைஞரை கைது செய்தனர். காவல் நிலையம் முன் குவிந்திருந்த முஸ்லிம் அமைப்பினர், அந்த இளைஞருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் காவல் நிலையத்தின் உள்ளே கற்களை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. கூட்டத்தினரை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

இதைத் தொடர்ந்து சிலர் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீஸார், கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

வன்முறையாளர்களின் கல்வீச்சு தாக்குதலில் காவல் ஆய்வாளர், 6 போலீஸார் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். இதில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் ஹுப்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள‌னர்.

இந்த கலவரம் காரணமாக ஹுப்ளி முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க அங்கு வரும்20-ம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தார்வாட் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறும்போது, ‘‘இந்த வன்முறைதிட்டமிட்டு நள்ளிரவில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹுப்ளியில் பொது அமைதி சீர்குலைக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் அமைப்பினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x