Published : 17 Apr 2022 05:44 AM
Last Updated : 17 Apr 2022 05:44 AM

பக்திப் பாடல் பாடியபடி திருமலை சென்ற தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

அலிபிரி அருகே செங்கல்பட்டை சேர்ந்த தமிழக பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியபடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

திருப்பதி: இசைக் கருவிகளுடன் பக்திப் பாடல்கள் பாடியபடி, திருப்பதி திருமலை சென்ற பக்தர்களுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தீபு சக்ரவர்த்தி குழுவினர் பக்திப் பாடல்கள் பாடியபடி, நேற்று முன்தினம் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலை வந்தடைந்தனர். பின்னர், அன்னதானம் செய்து விட்டு, அங்கேயே படுத்துறங்கினர். நேற்று காலை அலிபிரியிலிருந்து மீண்டும் பக்திப் பாடல்கள் பாடியபடி மலையேறி செல்ல அலிபிரி கருடன் சிலை அருகே வந்தனர்.

அப்போது, அங்கு காவலுக்கு இருந்த தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள், தமிழக குழுவினரை தடுத்து நிறுத்தி வாத்தியக் கருவிகளுடன் திருமலை செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறினர். இதனால் தமிழக பக்தர்கள் வாக்குவாதத்தில் இறங்கினர்.

கோவிந்தா...கோவிந்தா என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனை அறிந்த பாஜக ஆந்திர மாநில செய்தித் தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் அலிபிரிக்கு வந்து தமிழக பக்தர்களை திருமலைக்கு அனுமதித்தே தீர வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகளுடன் வாதிட்டனர். பல ஆண்டு காலமாக, பக்தர்கள் பக்திப் பாடல்கள் பாடியபடி திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம் என்றும் கூறினர்.

அதன் பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் வாத்தியக் கருவிகளுடன் தமிழக குழுவினரை திருமலைக்கு அனுமதித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை அலிபிரி அருகே பரபரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x