Published : 26 Mar 2022 02:27 PM
Last Updated : 26 Mar 2022 02:27 PM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்பு, 4.29 முதியோர்களுக்கு மாதந்தோறும் பென்ஷன் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் ஆம் ஆத்மி தொடர்ந்து 2-ம் முறையாக பதவி வகித்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக ஆம் ஆத்மி அரசு வரும் நிதியாண்டுக்கான (2022- 23) பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தாக்கல் செய்தார். ரூ.75,800 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையின்போது மணீஷ் சிசோடியா கூறியதாவது:
வரும் நிதியாண்டுக்காக ரூ.75,800 கோடி மதிப்பில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டின் அளவு ரூ. 69,000 கோடி. கடந்த பட்ஜெட்டை காட்டிலும் இந்த பட்ஜெட்டில் 9.86 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரோனா தாக்கத்திலிருந்து டெல்லியின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. 2011-12இல் நாட்டின் மொத்த உள்நாடு உற்பத்தியில் எங்கள் மாநிலத்தின் பங்கு 3.94 சதவிகிதமாக இருந்தது. 2021-22இல் இது 4.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கடந்த 7 ஆண்டுகளில் 1.78 லட்சத்துக்கும் மேலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 51,307 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள தனியார் துறையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்கென ரூ.100கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி தனிநபர் வருமானத்தின் சராசரி நாட்டின் சராசரியைவிட 2.7 சதவிகிதம் அதிகமாக உள்ளது. டெல்லியில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 33 சதவிகிதத்திலிருந்து 45 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...