Published : 17 Dec 2021 08:01 AM
Last Updated : 17 Dec 2021 08:01 AM

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஊசியில்லா கரோனா தடுப்பூசி அடுத்த வாரம் அறிமுகம்

கோப்புப்படம்


புதுடெல்லி: உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான ஊசியில்லா கரோனா தடுப்பூசியான ஜைகோவ்-டி அடுத்தவாரம் மக்களுக்கு அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பூசியைச் செலுத்தும் செவிலியர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அந்தப் பயிற்சி அனைத்தும்முடிந்துவிட்டதால், அடுத்தவாரம் நாட்டில் முறைப்படி அறிமுகமாகலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜைகோவ்-டி தடுப்பூசி உலகிலேயே முதன்முதலாக பிளாஸ்மா டிஎன்ஏ தடுப்பூசியாகும். கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசி என்பது ஜைடஸ் கெடிலா நிறுவனத்துடையது மட்டும்தான். கரோனாவுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு அதிக பாதுகாப்பும், திறன்மிக்கதாகச் செயல்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி, 28 மற்றும் 56 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும். 12 வயதுமுதல் 18 வயதுள்ள பிரிவினருக்காக இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் 18வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு கோவாக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இதுவரை இந்தியாவில் 5 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. கோவாக்ஸினுக்கு அடுத்தார்போல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பு மருந்து என்ற பெருமையும், முதல் டிஎன்ஏ வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

3 டோஸ் தடுப்பூசி

ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28-வது நாளில் 2-வது டோஸும், 56-வது நாளில் 3-வது டோஸ் செலுத்த வேண்டும். நீடில்லெஸ் தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.
ஊசியில்லாத் தடுப்பு மருந்து

அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்.
இந்தத் தடுப்பு மருந்து, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் கீழ்வரும். உயிர் தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.

7 மாநிலங்கள்

இந்நிறுவனத்தின் தகவலின்படி, ஒருடோஸ் தடுப்பூசி ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது, மத்திய அரசு சார்பில் ஒரு கோடி தடுப்பூசி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தவதற்கான பிரத்ேயக நீடிலுக்குத் தனியாக ரூ.93 செலுத்த வேண்டும். முதல்கட்டமாக இந்த தடுப்பூசி பிஹார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம், உத்தப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட உள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x