Published : 25 Jun 2014 08:11 AM
Last Updated : 25 Jun 2014 08:11 AM

புறநகர் ரயில்களில் கட்டண உயர்வு இல்லை: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

பயணிகள், சரக்கு ரயில் கட்டண உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. எனினும் 80 கி.மீ. தொலைவு வரை இயக்கப்படும் புறநகர் ரயில்களில் கட்டணம் உயர்வு இல்லை என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே துறை மூலம் நாள்தோறும் சுமார் 11,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

பயணிகள் ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.26,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும் சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தி ரயில்வே துறை கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த கட்டண உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.8000 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புறநகர் ரயில்களில் மாதாந்திர சீசன் கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டது. இரண்டாம் வகுப்புக்கான சீசன் கட்டனம் மூன்று மடங்கும், முதல் வகுப்புக்கான கட்டணம் பல மடங்கும் உயர்ந்தது.

இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ன. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனை கட்சி மும்பை புறநகர் ரயில் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பாஜக எம்.பி.க்கள் பலரும் புறநகர் ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தினர்.

பயணிகள் மகிழ்ச்சி

புறநகர் ரயில்களில் கட்டண உயர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு செவ்வாய்கிழமை பரிசீலனை செய்தது. இதையடுத்து, 80 கி.மீ. தொலைவு வரை இயக்கப்படும் புறநகர் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்படாது. அறிவிக்கப்பட்டிருந்த கட்டண உயர்வு ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது.

இதன்படி புறநகர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x