Last Updated : 12 Aug, 2021 06:49 PM

 

Published : 12 Aug 2021 06:49 PM
Last Updated : 12 Aug 2021 06:49 PM

ஜனநாயகம் அவமானப்படுத்தப்பட்டது: எதிர்க்கட்சிகளை விளாசும் பாஜக

எதிர்க்கட்சிகள் டெல்லி சாலைகளில் இறங்கிப் போராடி ஜனநாயகத்தை அவமானப்படுத்திவிட்டன என்று பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா கூறும்போது, நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் ஒட்டுமொத்த தேசத்தையும் அவமானப்படுத்திவிட்டது.

அதுமட்டும் போதாது என்று காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் சாலைகளில் இறங்கிப் போராடியுள்ளது. இது ஜனநாயகத்தை அவமானப்படுத்தும் செயல், மிகவும் துரதிர்ஷ்டவசமானதும் கூட.

நாடாளுமன்ற சர்ச்சை குறித்து மேலும் அவர் கூறுகையில், "மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகமும் கண்ணீர் சிந்தியுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதுமே அமளியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூட்டத்தொடர் வாஷ் அவுட்டில் முடிவதை உறுதி செய்துவிட்டனர். இதுதான் ஒழுங்கின்மையின் உச்சம்" என்று கூறினார்,

மக்கள் மன்னிக்கமாட்டார்கள்:

"எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாடுடற்ற நடவடிக்கைகளால் அவைக்காவலர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஜனநாயகப் படுகொலை நடவடிக்கைகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்கள், கரோனா மூன்றாவது அலை ஏற்படுமா? அதைப் பற்றி அரசு நாடாளுமன்றத்தில் தெரிவிக்குமா என்று எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தில் கோவிட் 19 குறித்து எதுவுமே விவாதிக்கப்படவில்லை" என்று சம்பித் பித்ரா கூறினார்.

வரலாற்றில் முதன்முறை:

பாஜகவின் குற்றச்சாட்டு இவ்வாறாக இருக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் கையாளாப்படுவது இதுவே முதன் முறை.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாநிலங்களவையில் பேசுவதற்குகூட அனுமதிக்கப்படவில்லை. இது ஜனநாயகப் படுகொலையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை பற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பியும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மிகப்பெரிய தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்களிடம் இந்த நாட்டைப் பிரதமர் மோடி விற்று வருகிறார். முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.க்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். வெளியே இழுத்து வரப்பட்டுள்ளார்கள்.

இந்த அவையை நடத்த வேண்டிய பொறுப்பு அவைத் தலைவருக்கு உண்டு" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x