Published : 29 Jun 2021 11:17 AM
Last Updated : 29 Jun 2021 11:17 AM

டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கும்? - வி.கே.பால் விளக்கம்

புதுடெல்லி

டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை இப்போதே கூற முடியாது என நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறினார்.

இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.

இந்தநிலையில் 28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான இன்சாகோக்கின் சமீபத்திய கண்டறிதல்களை தொடர்ந்து, கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. நாடுமுழுவதும் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:

கரோனா 3-வது அலை எப்போது ஏற்படும் என்பதை கூற முடியாது. புதிய அலை உருவாவதும் உருவாகாமல் இருப்பதும் நம் கைகளில் உள்ளது. அடுத்தடுத்த அலைகள் எப்போது நிகழும் என்பது குறித்து தேதிகள் நிர்ணயிக்காமல் இருப்பது நல்லது.

உருமாறிய டெல்டா பிளஸ் என்ற புதிய வகை வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவியல் பூர்வமான விபரங்கள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன. இது புதிய வகை தொற்று வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை இப்போதே கூற முடியாது.

அதுபோலவே தடுப்பூசியின் செயல்திறனை டெல்டா பிளஸ் பாதிக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் முழுமையான பதில் இல்லை. இதற்கு நாம் சில காலம் காத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x