தொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: ராஜஸ்தான், ம.பியில் மீண்டும் பெட்ரோல் 100 ரூபாயைக் கடந்தது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தேர்தல் காரணமாக கடந்த 18 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தொடர்ந்து 4வது நாளாக இன்றும் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்தது.

பெட்ரோல் விலை இன்று லி்ட்டருக்கு 29 பைசாவும், டீசல் 31 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.91.27ஆகவும், டீசல் ரூ.81.73 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக, ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.102.15 ஆகவிலை அதிகரித்துள்ளது.மத்தியப்பிரதேசம், அனுப்பூரில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.86 ஆகவும், மகாராஷ்டிராவில் பர்பானியில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.95 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் 2-வது முறையாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100க்கு அதிகமாக செல்கிறது. இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது.

கடந்த 4 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தியுள்ளன. இந்த 4 நாட்களில் பெட்ரோல் மீது 88 பைசாவும் , டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 15-ல் விலை குறைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.21.58 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.19.18 பைசாவும் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே கடந்த மார்ச் 24ம் தேதி பெட்ரோல் 67 பைசாவும், ஏப்ரல் 15ம் தேதி 74 பைசாவும் விலை குறைக்கப்பட்டது

தற்போது பெட்ரோல் விலையில் 60 சதவீதம் மத்திய அரசு, மாநில அரசுகள் வரியாகவும், டீசல் மீது 54 சதவீதம் வரியாகவும் செல்கிறது. பெட்ரோல் மீது மத்திய அரசு கலால்வரியாக லிட்டருக்கு ரூ.32.90, டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80 பைசாவும் வசூலிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in