Published : 02 May 2021 10:08 AM
Last Updated : 02 May 2021 10:08 AM
மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்தங்குகிறார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது . நந்திகிராமில் கடந்த 2007ல் ரசாயன ஆலைக்கு எதிரான நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்தவர் சுவேந்து அதிகாரி. இதனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி கடும் சவாலாக இருக்கிறார்.
இந்தநிலையில் மேற்குவங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி காணப்படுகிறது. தொடக்கநிலை வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 137 இடங்களிலும், பாஜக 115 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
எனினும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்தங்குகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் சுவேந்து அதிகாரி கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment