Published : 18 Dec 2020 01:57 PM
Last Updated : 18 Dec 2020 01:57 PM
1971 போரில் தேசத்தை கட்டமைத்தது காங்கிரஸ்; ஆனால் இப்போது நடப்பதோ எல்லையில் ஆயிரக்கணக்கான போர் நிறுத்த மீறல்கள் என்று பாஜகவை சிவசேனா மறைமுக தாக்குதலை தொடுத்துள்ளது.
கடந்த புதன் அன்று இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா ஆண்டு கொண்ட்டாட்டம் தொடங்குவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், பொன்விழா வெற்றி ஜோதியை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.
உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு போரில் வென்ற ஆயுதப்படைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். எனினும் போர் வெற்றிக்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
அதேநேரம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 1971 போரில் உயிர் நீத்த ராணுவத்தினருக்கு வீர வணக்கத்தை தெரிவித்ததோடு அன்றைய பிரதமரின் திறமையால் நாட்டின் எல்லைகளை அத்துமீற அண்டைநாடுகள் அச்சம் கொண்டிருந்த காலம் அது எனவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில் காங்கிரஸை பாராட்டுவதன் மூலம் பாஜகவை மறைமுகமாகத் தாக்கியுள்ளது.
இதுகுறித்து சாம்னா பத்திரிகை தலையங்கம் கூறியுள்ளதாவது:
"சீனா இந்த நிமிடம் வரை லடாக்கிலிருந்து விலகவில்லை, பாகிஸ்தானோ ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு (கட்டுப்பாடு) வழியாக தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறுகிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பாடத்தை கற்பித்தது. இன்று என்ன நடக்கிறது? 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது, ஆனால் ஜம்மு-காஷ்மீரில் அமைதி இல்லை.
1971 யுத்தம் ஒரு பரபரப்பான மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்வு. இந்த பொன்விழா ஆண்டு (பாக்கிஸ்தானை வென்றது) மற்றும் இந்திரா காந்தியின் ராஜதந்திரத்தின் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் பாகிஸ்தானை தோற்படிப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் கடற்படையை தோற்கடிக்க வழிவகுத்த அவரது ராஜாங்க முடிவுகளை நினைவில் கொள்வதற்கான நேரம்.
ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக்க்ஷா தலைமையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் படைகளைத் தாக்கி 13 நாட்களில் சரணடையச் செய்தது. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது என்பது வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்டுவரும் ஒரு குழந்தைத்தனமான கேள்வி. இந்த மக்கள் 1971 போரின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். இப்போதோ ஆயிரக்கணக்கான போர்நிறுத்த மீறல்கள் நடக்கின்றன.
2020 ஆம் ஆண்டில் மட்டும், சர்வதேச எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் 4,052 முறை பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது. காங்கிரஸ் என்ன செய்துள்ளது என்று கேட்பதற்கு பதிலாக, லடாக்கில் சீன ஊடுருவல் மற்றும் பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறல்களை நிறுத்த என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
இவ்வாறு சிவசேனாவின் சாம்னா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...