Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

விவசாயத்தில் முன் அனுபவமே இல்லாமல் காய்கறி பயிரிட்டு மாதம் ரூ.80 லட்சம் வருமானம்: மகாராஷ்டிர ஐஐடி பட்டதாரிகள் சாதனை

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் மயங்க் குப்தா மற்றும் லலித் ஜாவர்.பாம்பே ஐஐடி.யின் முன்னாள் மாணவர்கள். இருவரும்வேறு வேறு தொழில்களில் இருந்தனர். அவற்றை விட்டுவிட்டு வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட முடிவு செய்தனர். இயற்கை உரங்களால் விளைவிக்கப்படும் (ஆர்கானிக்) வேளாண் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஒரு இணையதளத்தை உருவாக்கினர். இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

காய்கறிகளின் தலைநகராக நாசிக் திகழ்ந்தாலும் இயற்கை உரங்களில் சாகுபடி செய்யும் காய்கறிகளின் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் சில காய்கறிகள் மற்றும் பழங்கள் இமாச்சல், பஞ்சாப் போன்ற இடங்களில் மட்டுமே விளையும் என்ற எண்ணமும் பரவலாக இருந்தது.

பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கோல்ஹாபூர் மாவட்டம்தான் விவசாயத்துக்கு சிறந்த இடமாக இருந்தது. மண் வளம், தண்ணீர் வளம் மற்றும் புனே, கோவா, மும்பை, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு புவியியல் ரீதியில் சரியான இடமாக இருந்தது. சர்க்கரை உற்பத்திக்கு முக்கிய கேந்திரமாக திகழும் கோல்ஹாபூரில் கடந்த ஆண்டு மயங்க், லலித் இருவரும் கூட்டாக ‘லாண்ட்கிராப்ட் அக்ரோ’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். கோல்ஹாபூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இவர்களது விவசாயப் பண்ணை. மொத்தம் 20 ஏக்கரில் 40 வகையான காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இது தவிர 150 விவசாயிகளுக்கு பயிற்சியும் அளித்துள்ளனர். அதாவது மேற்கூரை அமைத்து சாகுபடி செய்யும் விதத்தை இவர்கள் கற்று தந்ததில் 100 ஏக்கரில் அவர்கள் பயிரிடத் தொடங்கினர். இங்கு விளைவிக்கப்படும் அனைத்து காய்கறிகள், பழங்கள் அனைத்தும் ட்ரூகானிக் என்ற பிராண்டு பெயரில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இங்கு விளையும் காய்கறிகள், பழங்களை மகாராஷ்டிரமாநிலம் மட்டுமின்றி ஹைதராபாத், சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் இவர்கள் அனுப்புகின்றனர். இந்நிறுவனம் தொடங்கி ஓராண்டாகிறது. தற்போது இந்நிறுவனம் மாதம் ரூ.80 லட்சம் வருமானம் ஈட்டுகிறது. இதற்கு முன்பு தனது வாழ்நாளில் ஒரு செடியைக் கூட வளர்த்ததில்லை என்று கூறும் மயங்க், தொடக்கத்தில் பல தவறுகளை செய்து அதில் இருந்து கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.

விவசாயம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களைத் தொடர்புகொண்டு இயற்கை விவசாயம் மூலம் உரக்கலப்பு இல்லாதகாய்கறிகள், பழங்களை சாகுபடி செய்யத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார் லலித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x