Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM
சாதி, மதம் கடந்து ஒருவர் தன்விருப்பப்படி திருமணம் செய்துக்கொள்வது அவரது அடிப்படை உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இந்து பெண்கள் திருமணத்துக்காக மதம் மாற்றப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு அண்மையில் மதம் மாறி திருமணம் செய்வதை தடுக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதை பின்பற்றி கர்நாடகாவிலும் திருமணத்துக்காக மதம்மாறுவதை தடுக்கும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வாஜித் கான் கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என்னுடன் பணியாற்றும் மென்பொருள் பொறியாளர் ரம்யாவும் நானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எங்களது திருமணத்துக்குஎனது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். ரம்யாவின் பெற்றோர்எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்த நிலையில், ரம்யா பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். எனவே ரம்யாவை நீதிமன்றத்தில் நேரில்ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுஜாதா மற்றும் சச்சின் சங்கர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, "நாட்டில்திருமண வயதை கடந்த ஒருஆணோ, பெண்ணோ தனது விருப்பப்படி திருமணம் செய்துகொள்வதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிறது. சாதி, மதம் உள்ளிட்ட பேதமின்றி தனக்கு விருப்பமான ஒருவரை திருமணம் செய்துகொள்வது அவரது அடிப்படை உரிமை ஆகும். இதனை உச் சநீதிமன்றமும் வேறு சில உயர் நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளின் மூலம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளன.
ரம்யா திருமண வயதைகடந்தவர் என்பதால் தனது வாழ்க்கை குறித்து முடிவு எடுக்கஅவருக்கு முழு உரிமை இருக்கிறது. எனவே அவரை மகளிர் காப்பகத்தில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
திருமண வயதை கடந்த ஒரு ஆணோ, பெண்ணோ தனது விருப்பப்படி திருமணம் செய்துகொள்வதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT