Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM
நாகாலாந்தில் ஒருசில சமூகத்தினரால் நாய் இறைச்சி விரும்பிஉண்ணப்படுகிறது. இந்நிலையில், நாய்களின் கால்கள் கட்டப்பட்டு, இறைச்சிக்காக அவை கோணிப்பைகளில் கட்டி வைக்கப்பட்டி ருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து வந்த எதிர்ப்பை தொடர்ந்து நாகாலாந்தில் கடந்த ஜூலை 2—ம் தேதி நாய் மற்றும் நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனை செய்வோர் தரப்பில் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் கொஹிமா அமர்வில் வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் தங்கள் மனுவில், “அமைச்சரவை முடிவு என்ற பெயரில், அரசு உத்தரவாக இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் அனுமதியில்லாததால் இந்த உத்தரவு செல்லாது” என்று கூறியிருந்தனர்.
இது தொடர்பாக மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற அமர்வு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் நாகாலாந்து அரசு பதில் அளிக்கத் தவறியதால், அதன் உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் நாகாலாந்துக்கு முன்னதாக மிசோரம் மாநிலம் நாய் இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT