Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

ரூ.9.35 கோடி சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஒடிசா ஐஎப்எஸ் அதிகாரி அபே காந்த் பதக் சஸ்பெண்ட்

மகனுடன் அபே காந்த்

புவனேஸ்வர்

சொத்துக்குவிப்பு வழக்கில் தனது மகனுடன் கைது செய்யப்பட்ட ஐஎப்எஸ் (இந்திய வனப் பணி) அதிகாரி அபே காந்த் பதக்கை ஒடிசா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஒடிசா அரசில் கூடுதல் முதன்மைதலைமை வனப் பாதுகாவலர் (ஏபிசிசிஎப்) ஆக இருந்தவர் அபேகாந்த் பதக். 1987-ம் ஆண்டு பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக அபே காந்த் பதக்மற்றும் அவருக்கு நெருக்கமானவர் களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

இதில் ரூ.70 லட்சம் ரொக்கம், 800 கிராம் நகைகள், ரூ.23 லட்சம் நகைகளுக்கான ரசீதுகள், பெருமளவு வங்கி டெபாசிட் மற்றும் முதலீடுகளுக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். மேலும் அபே காந்த் மகன் ஆகாஷ் குமார் பதக் பெயரில் ஆடம்பர கார்கள், மோட்டார் பைக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அபே காந்த், அவரது மகன் ஆகாஷ் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இருவரின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம் இருவரையும் டிசம்பர் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அபே காந்த் பதக்கை ஒடிசா அரசு சஸ்பெண்ட் செய்தது.

இதனிடையே அபே காந்த் தனது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.9.35 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x