Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து (எல்விபி) வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 27-ம் தேதி முதல் தளர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை மட்டுமே எடுக்கலாம் என முன்னர் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடு டிசம்பர் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகள் நவம்பர் 27-ம் தேதியிலிருந்து தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கிக் கிளைகள் அனைத்தும் நவம்பர் 27-ம் தேதி முதல் டிபிஎஸ் வங்கியின் கிளைகளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வசதியாக போதிய நிதியை டிபிஎஸ் வங்கி அளிக்கும் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT