Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM
இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள், 1992-ல், முதன் முதலாக, இந்திய பெருங்கடலில் கூட்டு போர்ப் பயிற்சி மேற்கொண்டன. இது, மலபார் போர்ப் பயிற்சி என்று அழைக்கப்படுகிறது. இதில், 2015-ல் ஜப்பான் இணைந்தது. கடந்த ஆண்டு, ஜப்பான் கடலோரப் பகுதியில், போர்ப் பயிற்சி நடைபெற்றது. இந்தாண்டு, வங்கக் கடலில், விசாகப்பட்டினம் கடலோரத்தில் முதல் கட்டமாக, நவம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி தேதி வரை, மலபார் போர்ப் பயிற்சி நடைபெற்றது.
இரண்டாவது கட்டப் பயிற்சி, அரபிக் கடலில், நவம்பர் 17 முதல் 20 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2-ம் கட்ட மலபார் போர்ப் பயிற்சி கடந்த 17-ல் தொடங்கி நேற்று முடிந்தது. இந்த ஆண்டு ஆஸ்திரேலிய கடற்படையும் இந்தப் பயிற்சியில் இணைந்துள்ளது. இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், அமைதியை பராமரித்து, சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இணைந்து, 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த வகையில், முதல் முறையாக குவாட் நாடுகள் ஒன்றிணைந்து, மலபார் கூட்டு போர்ப் பயிற்சியை மேற்கொண்டன.
கடந்த 3 நாட்களாக கூட்டுப் போர்ப் பயிற்சி நடைபெற்ற நிலையில் நேற்று கடைசி நாள் பயிற்சி நடைபெற்றது. முதல் 2 நாட்களில் இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான விக்கிரமாதித்யா, அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் உள்ளிட்டவை பங்கேற்றன.
கடைசி 2 நாட்களில் நடைபெற்ற போர்ப் பயிற்சியில் விமானம் தாங்கி கப்பலில் இருந்து இந்தியாவின் மிக்-29 கே ரக விமானங்கள் பறந்து சாகசங்களை நிகழ்த்தின. கப்பலில் இருந்து அதிவேகத்தில் ஓடி கிளம்பிய இந்த விமானங்கள் தரையிறங்கும் போது எந்தவித பிரச்சினையும் இன்றி அதிவேகமாக தரையிறங்கி சாகசங்களை நிகழ்த்தின.
இந்தியாவின் பி-81, மிக்-29கே, அமெரிக்காவின் எப்-19, ஏஇடபிள்யூ, இ2சி ஹாக்ஐ விமானங்கள் கடைசி நாளில் சாகசங்களை நிகழ்த்தியதாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT