Published : 30 May 2020 08:03 PM
Last Updated : 30 May 2020 08:03 PM

கரோனா நோய்க்கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள், உணவு விடுதிகள் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி

நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத பகுதிகளில் அன்லாக் 1 என்ற பெயரில் படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகளுக்காக தளர்த்தப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு மே 31ம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், அது மேலும் நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும்? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அன்லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே படிப்படையாக தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் இவை மத்திய சுகாதார அமைச்சகம் விதித்த கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறுவது அவசியம்.

இரவு ஊரடங்கு மாலை 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை இருந்தது 9 மணி முதல் 5 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் இரவில் புழங்க அனுமதியளிக்கப்படுகிறது.

முதற்கட்ட தளர்வுகளில் ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள். மற்றும் பிற உணவு தொடர்பான கடைகள் போன்றவை திறக்க அனுமதி. சுகாதார அமைச்சகம் இதற்கான கட்டுப்பாட்டு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடும்.

* திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது

* சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

* ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதாவது இது தொடர்பாக மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள் நிறுவன மட்டத்தில் பெற்றோருடன் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த ஆலோனைகளின் அடிப்படையில் ஜூலை 2020-ல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க அனுமதியளிப்பது பற்றிய முடிவு எடுக்கப்படும்.

குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே நாடு முழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவை: சர்வதேச விமானப் பயணங்கள், மெட்ரோ ரயில்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், பார்கள், ஆடிட்டோரியம், மக்கள் கூடும் ஹால்கள், சமூக/அரசியல்/விளையாட்டு/பொழுதுபோக்கு/கல்வியியல்/பண்பாட்டு/மததொடர்பான பெரிய கூட்டங்கள் கூடும் நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்டத்தில் சூழ்நிலையை மதிப்பீடு செய்து இவைகளும் படிப்படியாகத் திறப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

* பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

* அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

* சிறப்பு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

* மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் 1, 2020 அன்று அமல் ஆகிறது. ஜூன் 30, 2020 வரை இது நீடிக்கும். நடப்பு பொருளாதார மறுதிறப்பு அன் - லாக்1 என்பது பொருளாதார நோக்கங்களுக்கானது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x