Published : 21 May 2020 05:13 PM
Last Updated : 21 May 2020 05:13 PM
இந்தியாவுடனான தங்களது உறவு குறித்து நல்ல முறையில் ஈடுபடும் விதமாக காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம். அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று தலிபான் அமைப்பு உறுதி கூறியுள்ளது.
ஆப்கனில் பரந்துபட்ட அரசியல் நிரந்தரத் தீர்வுக்காக இந்தியாவுடன் நல்லுறவு பேண தலிபான் முயன்று வருகிறது. இந்நிலையில் தோஹாவில் உள்ள தலிபான் அலுவலக செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார்.
தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் ட்விட்டரில், “சில ஊடகங்களில் இந்தியா குறித்து வெளியான அறிக்கைக்கும் இஸ்லாமிக் எமிரேட்டுக்கும் (தலிபான்) தொடர்பில்லை. இஸ்லாமிக் எமிரேட்டின் கொள்கை மிகத்தெளிவானது. அதாவது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம். பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது” என்று ட்வீட் செய்துள்ளார்.
இவருக்கு முன்பாக ஞாயிறன்று இன்னொரு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் என்பவர் பெயரில் வெளியான ட்விட்டர் பதிவில், “முஸ்லிம்கள் நாத்திகர்களுடன் நண்பர்களாக இருக்க முடியாது. காஷ்மீர் பிரச்சினை தீரும் வரை இந்தியாவுடன் நட்பு பாராட்ட முடியாது”என்று வெளியாகியது.
இந்த ட்வீட்டை மறுக்கும் விதமாகவே தோஹாவில் உள்ள தலிபான் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதே தலிபான்கள் நிலைப்பாடு என்று விளக்கியுள்ளார்.
ஆப்கனின் புதிய அரசியல் சூழ்நிலை என்னவெனில் அமெரிக்கப் படைகள் படிப்படியாக வாபஸ் பெறுவதுடன் தொடர்புடையது. இந்நிலையில் இந்தியாவுடன் தலிபான்கள் உரையாடல் தொடங்க வாய்ப்புள்ளதாக உலக அரசு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் முக்கியச் சொத்தாகக் கருதப்படும் ஹக்கானி நெட்வொர்க்கின் செல்வாக்கு தலிபான்களிடம் அதிகம், எனவே இந்தியா-தலிபான் இடையே உரையாடல் என்பது பலதரப்பட்ட கோஷ்டிகளை திருப்தி செய்வதன் முக்கியத்துவத்தில் உள்ளது என்கிறார் கிர்கிஸ்தான் முன்னாள் தூதர் ஸ்டோபன். எனினும் இந்தியா-தலிபான் உரையாடல் சாத்திய நிலையை எட்டியிருப்பதாகவே வெளிவிவகாரத் துறை அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment