Published : 11 May 2020 02:33 PM
Last Updated : 11 May 2020 02:33 PM
கார்கில் (லடாக் யூனியன் பிரதேசம்)
லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பனி உறைந்த கார்கிலில் வாழும் ஒன்றரை லட்சம் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டதை இந்தோ- திபெத்திய எல்லைக் காவல்துறை உறுதி செய்துள்ளது.
ஊரடங்கு காரணமாக இந்தியாவின் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரேவிதமான விதிமுறைகள்தான். அதிலும் யூனியன் பிரதேச மாநிலமான லடாக்கில் வாழும் மக்கள், எந்தத் தேவைக்கும் பனிமலையின் கீழே இருந்து வரும் உதவிகளை மட்டுமே எதிர்பார்க்க வேண்டிய நிலை.
இந்நிலையில் இமயமலையின் உயரமான பனி உறைந்த மலைப்பகுதியான கார்கிலுக்குப் பனிபடர்ந்த சோஜி லா- நகரின் வழியாக 900க்கும் மேற்பட்ட லாரிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இவை பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுவதை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து இந்தோ- திபெத் பார்டர் போலீஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
''ஊரடங்கு காரணமாக கடந்த 21 நாட்களில் சோஜி லா மலைப்பாதை வழியாக பனி உறைந்த கார்கில் நகரத்திற்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் 900க்கும் மேற்பட்ட லாரிகளுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கான பாதுகாப்பை மிகச்சரியாக நிறைவேற்றியுள்ளோம். கார்கிலில் வசிக்கும் கிட்டத்தட்ட 1.5 லட்சம் மக்களுக்கு உயிர் நாடியாகச் செயல்படும் சோஜி லா பாஸ் எனப்படும் மலைப்பாதை வழியாக இப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ள இம்மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி எரிபொருள் டேங்கர்கள் செல்வதற்கான முக்கியப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு தகுந்த பாதுகாப்பை அளித்துள்ளோம்.
உணவு மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சுமார் எட்டு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கார்கிலுக்குச் சென்றடைகின்றன. அனைத்து சோதனைகளின்போதும் சமூக விலகல் பின்பற்றப்பட்டது''.
இவ்வாறு இந்தோ- திபெத் பார்டர் போலீஸ் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment