சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: 14 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவு
இதையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும்நிலையில் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
பல மாநிலங்களில் அவர்கள் உள்ளூர் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் சிலர் நடந்த செல்கின்றனர். இவ்வாறு பலரும் தங்கள் சொந்த ஊர்களை சென்று சேர்ந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களுக்கு திரும்பி வரும்வேளையில் அங்கும் கரோனா வைரஸ் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும்நிலையில் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
